ஞாயிறு

தமாஷ் புத்தாண்டு வாழ்த்து அறிக்கைகள்-09

இதோ அடுத்த புத்தாண்டு அருகே வந்து விட்டது. அரசியல் கட்சிகளின் தலைமைக் கழகங்கள் தாங்கள் தொண்டர்களுக்கு புத்தாண்டு செய்திகளை அறிக்கையாக கொடுத்தால் ( கற்பனையாக ) எப்படி இருக்கும் ? இதோ இப்படித்தான்.....

திமுக அறிவாலயத்திலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி :
""கழக உடன்பிறப்புக்களே ! தலைவர் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று சொன்னதால் அடுத்த புத்தாண்டில் சோர்ந்து விட வேண்டாம் ! அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது... அவருடைய வாரிசுகளுக்கும் ஓய்வு என்பதே கிடையாது ! தலைவருக்கு அடுத்த வருடம் 36 பாராட்டு விழாக்களுக்கு ஜெக்தரட்சகன் ஏற்பாடு செய்துள்ளார்... அதனால், புத்தாண்டு புத்துணர்ச்சி தரும் இனிய ஆண்டாக இருக்கப் போகிறது. உடன்பிறப்பே, சோர்வு நீக்கி புறப்படு தேர்தல் களம் நோக்கி !''
அதிமுக தலைமைக் கழகச் செய்தி :
"" நம் தலைவி, வருகின்ற புது வருடத்தில் சித்திரை முதல் தை மாதம் வரை நேரம் சரியில்லை என்பதால் கோடநாட்டில் ஓய்வெடுக்க உள்ளார்...அங்கிருந்து போராட்டங்களை வழி நடத்துவார்... அடுத்த ஆண்டில் நம் கட்சியிலிருந்து 110 தலைவர்கள் அணி மாறினாலும் மாறுவார்கள் என்று தளவதி வெங்கடேஷ் அறிவித்துள்ளார். அதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டியது தொண்டர்களின் கடமை ! யார் இருந்தாலும் போனாலும் கம்யூனிஸ்ட்டுகள் நமக்குத் தோள் கொடுப்பார்கள் என்பதால் கவலை வேண்டாம்!
புரட்சித் தலைவியின் தலைமையில் வருகிற புத்தாண்டில் கட்சி என்ன ஆகப் போகிறதோ என்கிற கவலையை விட்டு விடுங்கள் ! அந்தக் கவலையைத் தலைவர்கள் படுவார்கள் ! வாழ்க புரட்சித் தலைவி !''
பாமக தைலாபுரத்தில் இருந்து வெளியான வாழ்த்து அறிக்கை !
""வருகிற புத்தாண்டிலும் தலைவர் கலைஞர் அவர்கள் நல்லாட்சி நடத்துவார் ! நிச்சயம் நம்மை அழைத்துப் பேசுவார். அவர் நம்மை அழைத்துப் பேசி, தட்டிக் கொடுத்து நம் கண்ணீரைத் துடைத்து வைக்கும் நாளே நமக்குப் புத்தாண்டுத் திருநாள் ! பங்காரு அடிகளாரை யாரும் நம்ப வேண்டாம் ! சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவன் எல்லாம் இப்போது பிஎம்டபிள்யூவில் போகிறான்... அடுத்த வருடம் ஏதாவது பெரிய மாற்றம் நடந்து அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால்தான் இந்த நாட்டுக்கு விடிவு காலம் ! ஜெயலலிதாவை நம்பினால் நாசமாய்ப் போவீர்கள் ! அன்னை சோனியா கருணையின் வடிவம் ! அடுத்தக்கட்டப் போர் ஈழத்தில் புத்தாண்டில் தொடங்கும் ! கலைஞரின் நல்லாட்சியில் புத்தாண்டில் தமிழகம் பீடு நடைபோடும் ! பாமக வை அழிக்க நினைக்கிறவன் எவனாக இருந்தாலும் வருகிற புத்தாண்டில் ரத்தம் கக்கி செத்துப் போவான் ! ''
சத்யமூர்த்தி பவனிலிருந்து காங்கிரஸ் சார்பாக வந்த 13 அறிக்கைகளில் ஒன்று :
""காங்கிரஸ் தொண்டர்களே ! புத்தாண்டு வாழ்த்துக்கள் !! ஈழத்தில் விடுதலைப் புலிகளை தலைவர் ராஜபக்ஷேவும் தளபதி பொன்சேகாவும் இணைந்து ஒடுக்கிய சென்ற ஆண்டு உண்மையிலேயே நமக்கு மறக்க முடியாத ஆண்டு ! மிச்சமிருப்பவர்களையும் இந்த ஆண்டில் அழித்து விட வேண்டும் என்று அன்னை சோனியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் ! தங்கபாலுவை தலைவர் பதவியிலிருந்து எப்பாடுபட்டாவது நீக்குவோம் என்று புத்தாண்டு சபதம் ஏற்போம் ! நமக்கு ஆட்சியில் பங்கு தராத திமுகவை ஆட்சியை விட்டு நீக்கி தலைவர் கலைஞரை வாழ்த்துவோம் ! சொதப்பலாக எதிர்க்கட்சிப் பணி ஆற்றி நம்மை வாழ வைக்கும் பாரதீய ஜனதாவுக்கு புத்தாண்டு நன்னாளில் நன்றி சொல்வோம் !''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக