ஞாயிறு

தயாராகிறதா புது இயக்கம் ?



ஈழத்துத் தமிழ் மக்களுக்குப் போராடுவதற்காக விடுதலைப்புலிகளைப் போல ஒரு புதிய இயக்கம் முளைத்திருக்கிறது. ""மீண்டும் ஆயுதப் போராட்டம்.ஈழம்தான் இறுதி லட்சியம்'' என்று அறிவித்துள்ளது. ""மக்கள் விடுதலைப்படை'' என்ற இந்தப் புதிய இயக்கம்.
யார் இவர்கள் ? இவர்களை நம்பலாமா?
கிழக்கு மாகாண காட்டுப் பகுதியில் மறைந்திருந்து செயல்படுவதாக சொல்லப்படும் மக்கள் விடுதலைப்படையின் தளபதி கோணேஸின் பேட்டி, கடந்த வாரம் ""தி டைம்ஸ்'' பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. ""கடந்த மே மாதத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் ""மக்கள் விடுதலைப்படை'' என்ற புதிய ஆயுதக் குழுவைக் கட்டியெழுப்பி உள்ளோம். விரைவிலேயே நடவடிக்கைகளில் இறங்குவோம். தமிழர்களின் தனித்தாயகமான தமிழீழத்தை அடையும் வரையும் எங்கள் போராட்டம் ஓயாது. எமது இயக்கத்தில் இப்போது 300பேர் வரையிலான போராளிகள் இருக்கின்றார்கள். வன்னித்தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பவர்களில் இருந்து 5,000 தொண்டர்கள் வரையில் விரைவில் எம்மோடு இணைந்து கொள்வார்கள். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இருந்து எங்களின் இயக்கம் முற்றிலும் மாறுபட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மக்கள் விடுதலைப்படையின் அரசியல் நோக்கத்தை ஏற்று விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டு இணைந்து கொள்ளலாம்'' என்று இந்தப் பேட்டியில் கூறியுள்ளார் கோணேஸ்.
யார் இந்த கோணேஸ்?
""கோணேஸ் யார் என்பது ஈழத்தமிழர்களுக்கே குழப்பமாக இருக்கிறது. தனக்கு 40 வயதாவதாகவும், தான் 1980 களில் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும், பாலஸ்தீன இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தனக்குத் தொடர்பு உண்டு என்றும் அந்தப் பேட்டியில் கோணேஸ் குறிப்பிட்டுள்ளார். முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கோணேஸ் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் இவரா என்றும் தெரியவில்லை. ஆனால் ,திடீரென தோன்றியிருக்கும் இந்த ""மக்கள் விடுதலைப்படை'' பற்றியும் அதன் பின்னணி தொடர்பாகவும் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக, தமிழர்கள் விடுதலைப்போராட்டத்தை குழப்புவதற்காக சிங்கள அரசு உருவாக்கியுள்ள இயக்கமாக இது இருக்கலாம் என்ற சந்தேகமே அங்குள்ள பலருக்கும் இருக்கிறது'' என்கிறார் இலங்கையில் இருந்து வெளியேறிய ஒரு தமிழ் பத்திரிக்கையாளர்.
""ஏற்கனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இது போன்ற குழப்பங்களை உண்டாக்கினர். பிரபாகரன் மரணத்துக்குப் பிறகு செல்வராசா பத்மநாபன் இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை எடுத்து, சிதறியிருந்த போராளிகளை ஒருங்கிணைக்க முற்பட்டது சிங்கள அரசுக்கு பெரும் அபாயமாகத் தெரிந்தது. அதற்காக நயவஞ்சகமாக ஒரு திட்டத்தைப் போட்டது. அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கேபி தலைமையை ஏற்காது முரண்பட்டதைப் பயன்படுத்தி, கேபி தலைமையை ஏற்பதாக அறிவித்து அவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார் விடுதலைப்புலிகளின் ராம். இந்த ராம் சிங்கள ராணுவத்திற்கு விலைபோய்விட்டார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் கேபி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கேபியை நாடு கடத்தியது சிங்கள அரசு. அடுத்து மாவீரர் நாளான நம்பர் 27 ம்தேதி ராம் மூலமாக ""நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தலைவர் உருத்திரக்குமாரனைக் கடத்துவதற்கும் திட்டமிட்டனர். அதேவேளை, ராம் மூலமாக ""மாவீரர் நாள் அறிக்கை''யை வெளியிட்டு வெளிநாட்டுத் தமிழர் மத்தியில் குழப்பத்தையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தவும் திட்டம் தீட்டி இருந்தனர். அந்தச் சதியைக் கண்டுபிடித்த புலிகள் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் அறிவழகன் அதை அம்பலப்படுத்தினார்'' என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு பத்திரிக்கையாளர்.
இந்தத் துரோகப் பின்னணியில் தமிழர்களுக்காக இன்னொரு இயக்கம் துவக்கப்பட்டிருப்பதை தமிழர்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள்.
"" சிங்கள ராணுவம் பிடித்து வைத்துள்ள 11,000 முன்னாள் போராளிகளை விடுதலைச் செய்யக் கோரி பல இடங்களில் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் வருகிறது. மக்கள் விடுதலைப் படையைக் காரணம் காட்டி, ""தமிழ் பயங்கரவாதம்'' இன்னும் அழிந்துவிடவில்லை என்று சொல்லி, அந்தப் போராளிகள் விடுதலையைத் தள்ளிப் போடுவார்கள். மேலும், இவர்களில் தீவிரமான பல போராளிகளைக் கொன்றுவிட்டு அவர்கள் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்து காட்டுக்குள் மறைந்துவிட்டார்கள் என்று உலகிற்குச் சொல்லிவிடவும் இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாகவும் உயர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன. யார் உண்மையான போராளிகள் எனத் தெரியாமல் தமிழ் மக்களை குழப்பத்தில் வைத்திருக்கும் இந்தப் படையை சிங்கள அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் இன்னொரு பத்திரிக்கையாளர்.
இந்த சிக்கல்களில் தெளிவாக இருக்கும் ஒரே சங்கதி, தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது.

தமாஷ் புத்தாண்டு வாழ்த்து அறிக்கைகள்-09

இதோ அடுத்த புத்தாண்டு அருகே வந்து விட்டது. அரசியல் கட்சிகளின் தலைமைக் கழகங்கள் தாங்கள் தொண்டர்களுக்கு புத்தாண்டு செய்திகளை அறிக்கையாக கொடுத்தால் ( கற்பனையாக ) எப்படி இருக்கும் ? இதோ இப்படித்தான்.....

திமுக அறிவாலயத்திலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி :
""கழக உடன்பிறப்புக்களே ! தலைவர் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று சொன்னதால் அடுத்த புத்தாண்டில் சோர்ந்து விட வேண்டாம் ! அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது... அவருடைய வாரிசுகளுக்கும் ஓய்வு என்பதே கிடையாது ! தலைவருக்கு அடுத்த வருடம் 36 பாராட்டு விழாக்களுக்கு ஜெக்தரட்சகன் ஏற்பாடு செய்துள்ளார்... அதனால், புத்தாண்டு புத்துணர்ச்சி தரும் இனிய ஆண்டாக இருக்கப் போகிறது. உடன்பிறப்பே, சோர்வு நீக்கி புறப்படு தேர்தல் களம் நோக்கி !''
அதிமுக தலைமைக் கழகச் செய்தி :
"" நம் தலைவி, வருகின்ற புது வருடத்தில் சித்திரை முதல் தை மாதம் வரை நேரம் சரியில்லை என்பதால் கோடநாட்டில் ஓய்வெடுக்க உள்ளார்...அங்கிருந்து போராட்டங்களை வழி நடத்துவார்... அடுத்த ஆண்டில் நம் கட்சியிலிருந்து 110 தலைவர்கள் அணி மாறினாலும் மாறுவார்கள் என்று தளவதி வெங்கடேஷ் அறிவித்துள்ளார். அதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டியது தொண்டர்களின் கடமை ! யார் இருந்தாலும் போனாலும் கம்யூனிஸ்ட்டுகள் நமக்குத் தோள் கொடுப்பார்கள் என்பதால் கவலை வேண்டாம்!
புரட்சித் தலைவியின் தலைமையில் வருகிற புத்தாண்டில் கட்சி என்ன ஆகப் போகிறதோ என்கிற கவலையை விட்டு விடுங்கள் ! அந்தக் கவலையைத் தலைவர்கள் படுவார்கள் ! வாழ்க புரட்சித் தலைவி !''
பாமக தைலாபுரத்தில் இருந்து வெளியான வாழ்த்து அறிக்கை !
""வருகிற புத்தாண்டிலும் தலைவர் கலைஞர் அவர்கள் நல்லாட்சி நடத்துவார் ! நிச்சயம் நம்மை அழைத்துப் பேசுவார். அவர் நம்மை அழைத்துப் பேசி, தட்டிக் கொடுத்து நம் கண்ணீரைத் துடைத்து வைக்கும் நாளே நமக்குப் புத்தாண்டுத் திருநாள் ! பங்காரு அடிகளாரை யாரும் நம்ப வேண்டாம் ! சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவன் எல்லாம் இப்போது பிஎம்டபிள்யூவில் போகிறான்... அடுத்த வருடம் ஏதாவது பெரிய மாற்றம் நடந்து அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால்தான் இந்த நாட்டுக்கு விடிவு காலம் ! ஜெயலலிதாவை நம்பினால் நாசமாய்ப் போவீர்கள் ! அன்னை சோனியா கருணையின் வடிவம் ! அடுத்தக்கட்டப் போர் ஈழத்தில் புத்தாண்டில் தொடங்கும் ! கலைஞரின் நல்லாட்சியில் புத்தாண்டில் தமிழகம் பீடு நடைபோடும் ! பாமக வை அழிக்க நினைக்கிறவன் எவனாக இருந்தாலும் வருகிற புத்தாண்டில் ரத்தம் கக்கி செத்துப் போவான் ! ''
சத்யமூர்த்தி பவனிலிருந்து காங்கிரஸ் சார்பாக வந்த 13 அறிக்கைகளில் ஒன்று :
""காங்கிரஸ் தொண்டர்களே ! புத்தாண்டு வாழ்த்துக்கள் !! ஈழத்தில் விடுதலைப் புலிகளை தலைவர் ராஜபக்ஷேவும் தளபதி பொன்சேகாவும் இணைந்து ஒடுக்கிய சென்ற ஆண்டு உண்மையிலேயே நமக்கு மறக்க முடியாத ஆண்டு ! மிச்சமிருப்பவர்களையும் இந்த ஆண்டில் அழித்து விட வேண்டும் என்று அன்னை சோனியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் ! தங்கபாலுவை தலைவர் பதவியிலிருந்து எப்பாடுபட்டாவது நீக்குவோம் என்று புத்தாண்டு சபதம் ஏற்போம் ! நமக்கு ஆட்சியில் பங்கு தராத திமுகவை ஆட்சியை விட்டு நீக்கி தலைவர் கலைஞரை வாழ்த்துவோம் ! சொதப்பலாக எதிர்க்கட்சிப் பணி ஆற்றி நம்மை வாழ வைக்கும் பாரதீய ஜனதாவுக்கு புத்தாண்டு நன்னாளில் நன்றி சொல்வோம் !''

ஐந்தில் மகிழாதது...

தமிழ்நாட்டில் செயல்வழிக் கல்வி தொடங்கப்பட்டபோது சில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டாலும்,​​ "தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தை மாற்றி அமையுங்கள்,​​ வீட்டுப்பாடங்களை ஒழியுங்கள்' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்திய சென் இப்போது கூறியுள்ள கருத்தைப் பார்க்கும்போது,​​ செயல்வழிக் கல்வி நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை.​ அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை ​(இந்தியா)​ என்ற அமைப்பு,​​ ​ மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது,​​ அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு,​​ மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல,​​ சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக,​​ பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன.​ வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு ​(டியூஷன்)​ அனுப்புகின்றனர்.​ இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.

இந்த ஆய்வுகளின்படி,​​ தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை.​ முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும்,​​ பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை.​ இதற்கு ​ தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது.​ குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை.​ உரையாடல்,​​ விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன.​ குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர்.​ 5 வயதுக்குப் பிறகு,​​ தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல்,​​ ​ ​ மொழி ஆகியவற்றின் அடிப்படை,​​ படித்தல்,​​ எழுதுதல்,​​ ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது.​ பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர்.​ ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.

நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில்,​​ இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள்.​ வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள்.​ பேசினார்கள்,​​ சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள்.​ பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள்.​ அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும்,​​ தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது.​ மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.

இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள்,​​ கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது.​ நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள்.​ எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள்.​ வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள்.​ புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள்.​ தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள்.​ இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட,​​ குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!

ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.

தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.​ அந்த பாடத்திட்டங்கள்,​​ அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில்,​​ எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.​ ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால்,​​ அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு,​​ உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும்,​​ இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை.

"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல,​​ அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக,​​ நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது.​ ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.​ ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.

சனி

நகைச்சுவை..!


நெட்டில் சுட்டது..!

சமாளிப்பா?​ திறமையின்மையா?

கடந்த 13 நாள்களாக ஆந்திர மாநிலம் முழுவதுமே கொதித்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலைமை மாறி,​​ தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேர பந்த் என்பதாக வரம்புக்குள் வந்துள்ளது வன்முறை.




வன்முறை வரம்பு கடந்ததற்கும்,​​ வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான்.​ தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.​ இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.



மத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன்,​​ அவஸ்தைப் படுவானேன்,​​ இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி,​​ விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்!



தெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்.​ ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார்.​ அப்படியானால்,​​ அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் ​ கொடுத்தார்கள்?​ அதுவும்,​​ காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,​​ எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன?​ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின?



தெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு,​​ தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து,​​ பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர,​​ சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.



அதிக முக்கியத்துவம் இல்லாமல்,​​ கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை,​​ காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து,​​ வெற்றி பெறவும் வைத்து,​​ அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க ​ விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி.​ தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து,​​ அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே.​ அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.



இந்தியத் தேர்தல் முறையில்,​​ நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு,​​ தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி,​​ அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும்,​​ மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.​ அதேபோன்றுதான்,​​ தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும்,​​ கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி,​​ தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும்,​​ தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது.​ ஆனால்,​​ காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி,​​ தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது.​ ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா ​ தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி,​​ மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி,​​ இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி,​​ தலைக்குனிவை ஏற்படுத்தியது.



இழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும்,​​ இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும்,​​ புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா,​​ அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா?​ தெலங்கானாவைப் பிரித்தால்,​​ ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும்,​​ பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல்,​​ அறிவிப்புச் ​ செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால்,​​ அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா?​ அல்லது எல்லாம் தெரிந்திருந்தும்,​​ நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா!​ எப்படிப் புரிந்துகொள்வது?



இதனால் ஆந்திர மாநிலம்,​​ குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது,​​ வேதனையாக இருக்கிறது.​ மருந்து உற்பத்தி,​​ தகவல்தொழில்நுட்பம்,​​ சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ.​ 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.​ மேலும்,​​ இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு,​​ சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது.​ வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.​ ​



இப்போதும்கூட,​​ ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால்,​​ புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.



இதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல.​ ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான்.​ உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.

திங்கள்

உன் குற்றமா? என் குற்றமா?

நகரத்தின் கடைவீதியில் சைக்கிள் ஓட்டவோ, நடைபாதையில் நடக்கவோ முடியாதபடி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்போது, அதற்காக ஒரு குடிமகன் எரிச்சலும் மனக்கொதிப்பும் அடைந்தால், அதை நகரத்தின் வளர்ச்சி என்று நினைத்து சமாதானம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.






அந்த மனக்கொதிப்பு நியாயமானதுதான் என்று நமக்குப் புரிய வைத்திருக்கிறார் கொலம்பியா நாட்டின் பொகோடா நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் என்ரிக் பெனலோசா. ஏனென்றால், "கார்நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என்பது அந்நாட்டுக் குடிமகனின் அரசியல் சாசனம் வழங்கிய உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை'





சென்னையில் இந்திய தொழிற்துறை சம்மேளனம் (சிஐஐ) நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் இதை அவர் குறிப்பிடும்போது, நடைபாதையில் நடக்கும் சாதாரணக் குடிமகனின் ஆத்திரம் நியாயமடைகிறது.





இவர் இங்கே பேசியது மட்டுமல்ல, அவரது ஊரில் நடைமுறைப்படுத்தியவரும்கூட. சாலைகளில் கார் நிறுத்தங்களுக்குத் தடை விதித்தவர். "ஒரு நகரின் தரத்தை நிர்ணயிப்பது அந்நகரில் உள்ள மேம்பாலங்களோ, நெடுஞ்சாலைகளோ அல்ல. அகலமான நடைபாதைகள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைப் பாருங்கள். நடைபாதைகளுக்கும், சைக்கிளுக்கும் அதிக இடம் தந்திருக்கும்' என்றும் சுட்டிக்காட்டுகிறார்.





சென்னை நகரில் தற்போது அமைக்கப்படும் மேம்பாலங்கள்கூட 5 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைத்தான் தரும் என்றும் தீர்க்கமாகக் கூறுகிறார் அவர். "பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்துதான் தேவை. ஒரு பஸ் தடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 40,000 பேர் பயணம் செய்ய முடியும் என்றால், அதேநேரத்தில் ஒரு கார் தடத்தில் 2,000 பேர்தான் பயணம் செய்ய முடியும்' என்பது அவரது கருத்து.





ஏன் இது நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரியவில்லை? ஏன் அவர்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்க்காமல், மேம்பாலங்களும், கார் பார்க்கிங் இடங்களையும் விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள்?





சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய கடைவீதிகளின் இருபுறமும் கார் நிறுத்துமிடம் உள்ளது. இதில் நிறுத்த இடமில்லாத கார்கள், குறிப்பாக அரசியல்வாதி அல்லது அதிகாரிக்குச் சொந்தமெனில், போலீஸýக்கு அஞ்சாமல் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக!





தமிழகத்தின் நகரங்களில் உள்ள பல பள்ளிகள் (இங்குதான் அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கிறார்கள்) பெற்றோரின் கார்களை, குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிப்பதே இல்லை. இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் மிக விசாலமான விளையாட்டுத் திடல், கார்நிறுத்த வசதிகள் இருக்கின்றன. இத்தனை வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டு, காலை மாலை இருவேளையும் சுமார் ஒருமணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.





இதே நிலைமைதான் கல்யாண மண்டபங்களிலும். நகரின் முக்கியப் பகுதியில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபங்கள் உள்ளன. வருபவர் அனைவரும் காரில் வருகிறார்கள். மண்டப வளாகம் கொள்ளாமல் சாலைகளில் நிறுத்தப்படும் கார்கள் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறும் காலதாமதமும் சொல்லிமாளாது.





கார் வைத்திருப்பதாலோ, சாலை வரி கட்டுகிறார் என்பதாலோ ஒருவர் பொதுமக்களுக்குச் சொந்தமான பொதுஇடத்தை-சாலையை-அடைத்துக் கொண்டு பார்க்கிங் வசதி பெற முடியுமா? அதைத் தனது அடிப்படை உரிமையாகக் கோருவது சரியாகுமா?





கார்களை நிறுத்துவதற்கான பலஅடுக்கு மாடிகளைப் பிரத்யேகமாக அமைத்துத் தர வேண்டிய பொறுப்பு கார்களைத் தயாரித்து வீதிகளில் விடும் நிறுவனங்களுக்கும் உண்டு அல்லவா! தங்கள் சொந்தப் பணத்தில், சொந்தமாக இடம்வாங்கி, வசதி செய்து தர வேண்டிய அவர்களது கடமையை நகராட்சி, மாநகராட்சி மீது திணிப்பது சரியல்ல.





சாதாரண நகரத்தைக்கூட கார்கள் படாதபாடு படுத்துகின்றன. அண்மையில் ஒசூரில் 500 நானோ கார்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மொத்தம் 4000 நானோ கார்கள் ஒசூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அங்கு 20,000 கார்கள் உள்ளன. மிகச் சிறிய நகராட்சி இந்தக் கார்களுக்கான நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் சாத்தியம்?





கார் நிறுத்தும் அடுக்குமாடிகளைக் கட்டித்தர வேண்டிய பொறுப்பு, செலவு இரண்டிலும் கார் உற்பத்தி நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டாமா? நகரத்தை கார்களால் நிரப்பும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புதான் என்ன?





இந்த வேளையில்தான் என்ரிக் பெனலோசா சொல்வதை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது: ""கார் பார்க்கிங் என்பது ஒரு குடிமகனின் அரசியல் சாசன உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை''.





கார் வாங்கும் சக்தி ஒரு சிலருக்கு இருக்கிறது என்பதாலேயே பெரும்பாலான குடிமக்களால் நடைபாதையில் நடக்கவே முடியாதென்றால் அது...

வியாழன்

தார்மிக வரம்பு மீறல்!

எந்த ஒரு செயலும் சட்டப்படி சரியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. தார்மிக ரீதியாகவும் அந்தச் செயல் ஏற்புடையதாக இருக்க வேண்டும். கொலை செய்வது, கற்பழிப்பது போன்ற செய்கைகள் சட்டப்படி சரி என்று பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் ஒரு அரசு சட்டம் இயற்றுவதாலேயே, அந்தச் செயல்கள் சரியான செயல்கள் ஆகிவிடாது. அதேபோலத்தான், நமது அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்துக்குச் செலவு செய்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்கிற தார்மிக வரம்பு மீறலும்!
1994-ம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அப்போது நிதியமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை விவரம் தெரிந்த யாருமே ஆரம்பம் முதலே அங்கீகரிக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்பதை மக்கள் நலனில் அக்கறை உள்ள பலரும் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்தாலும், "பணம்' என்று வரும்போது கட்சி மாச்சரியங்களை மறந்து அனைத்துக் கட்சியினரும் கைகோர்த்துக் கொள்வதால் ஏற்படும் மக்களவைப் பெரும்பான்மை அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டிருக்கிறது.
நாடாளுமன்றக் குழு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இந்த நிதியை ஆண்டொன்றுக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப் பரிந்துரை செய்திருக்கிறது. ரூ.5 கோடியாக இந்த நிதி அதிகரிக்கப்பட்டாலே, இப்போதைய ரூ.1,600 கோடியிலிருந்து வருட நிதி ஒதுக்கீடு ரூ.4,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுவிடும். ரூ.10 கோடி என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தைப் பின்பற்றி, எல்லா மாநிலங்களிலும் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது. இப்போது, ஒன்றன்பின் ஒன்றாக, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளையும் இந்த வியாதி தொற்றிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது.
2002-ம் ஆண்டுக்கான மத்திய தணிக்கை மற்றும் வரவு - செலவு மேற்பார்வை இயக்குநரின் அறிக்கை பல மாநிலங்களிலும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷயத்திலும் முறைகேடுகளும், குளறுபடிகளும் காணப்படுவதைக் கண்டுபிடித்துள்ளது. எதற்காக நிதி ஒதுக்கப்பட்டதோ அதற்கு அந்த நிதி சென்றடையவில்லை என்றும், நிதி ஒதுக்கீடு முறைகேடாகப் பயன்பட்டது என்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை விமர்சித்திருக்கிறது அந்த அறிக்கை.
ஒரு சில அரசியல் கட்சிகள், தங்களது உறுப்பினர்கள் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியை கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்த ஊக்குவித்திருப்பதும், இந்த நிதியின் மூலம் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்சிக்கு நன்கொடை என்கிற பெயரில் இந்த நிதியின் ஒரு பகுதியை அளிக்க வற்புறுத்தப்படுவதாகவும்கூட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2005-ல் புலனாய்வு முயற்சியில் ஈடுபட்ட ஒரு தொலைக்காட்சி அலைவரிசை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கித் தர கையூட்டுப் பெறுவதைப் படம்பிடித்து அம்பலப்படுத்தியது. அரசு, தவறுகளைத் திருத்த என்ன வழி என்று ஆராய முற்பட்டதே தவிர ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் திட்டத்தைக் கைவிடத் தயாராகவில்லை.
நமது அரசியல் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களையும் திட்டங்களையும் முன்வைப்பதற்கும் நிர்வாக இயந்திரம் அதை நிறைவேற்றுவதற்கும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே என்னென்ன தேவை என்பதைப் பட்டியலிட்டு, அவர்களே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்களானால் பிறகு நிர்வாக இயந்திரமும், அரசு அதிகாரிகளும் எதற்கு?
2005 ஏப்ரல் மாதத்தில் நடந்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும், அதற்குச் செலவிடப்படும் நிதி ஒதுக்கீடு உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் தேவையைக் கேட்டறிந்து நேரடியாக அந்த அமைப்புகளுக்குத் தரப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் சோனியா காந்தி.
2007-ல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக் கமிஷனும் ""தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் - நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ எதுவாக இருந்தாலும் - தானே தனது தொகுதியின் மேம்பாட்டுக்கான பணியைத் தீர்மானித்துத் தமது நேரடி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றுவது ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்பதன் அடிப்படையையே இந்தத் திட்டம் தகர்த்து விடுகிறது'' என்று கருத்துத் தெரிவித்தது.
இடதுசாரிகளையும், காஷ்மீரத்தைச் சேர்ந்த சிறுத்தைகள் கட்சியினரையும் தவிர, ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் எல்லோருமே, தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாகவோ, ரூ.10 கோடியாகவோ அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். கடந்த 14 ஆண்டுகளாக ஒதுக்கப்படும் இந்த மேம்பாட்டு நிதியால் உறுப்பினர்கள் வேண்டுமானால் மேம்பாடு அடைந்திருக்கலாம், ஆனால் அவர்களது தொகுதி மேம்பாடு அடைந்ததாகத் தெரியவில்லை.
ஊழலில் ஊற்றுக் கண் என்று தெரிந்தும் இந்தத் திட்டம் தொடர்வது நல்லதல்ல!

தேசத்தின் சொத்து...!!!

அம்பானி சகோதரர்களை நாம் அடிக்கடி சந்தித்திருக்கிறோம். குறுகிய காலத்தில் அவர்கள் எப்படி உலகக் கோடீசுவரர்களாக உருவானார்கள் என்பதனைப் பார்த்திருக்கிறோம். அதற்கு பங்குச் சந்தை எந்த அளவிற்கு அவர்களுக்குக் கைகொடுத்தது என்பதனையும் கண்டிருக்கிறோம்.

அவர்கள் நினைத்தால் பங்குச் சந்தை குறியீட்டு எண் இமயத்திற்கு எகிறும். அவர்கள் விரும்பினால் அதே குறியீட்டு எண் அதல பாதாளத்திற்கு அந்தர்பல்டி அடிக்கும்.

அவர்களுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் உண்டு. எப்படி வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களை உள்நாட்டு அழைப்புகளாகக் கணக்கிட்டு கோடிகளை அள்ளிக் கொண்டனர் என்பது உச்ச நீதிமன்றத்திலேயே அம்பலமானது. அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், முழுத் தொகையையும், அவர்கள் கட்டவில்லை. கட்டிய அளவிற்குப் போதும் என்று நமது மன்மோகன் அரசு கருணை காட்டியது. தள்ளுபடி செய்யப்பட்டது பல கோடி ரூபாய்! பெட்டிக்கடைக்காரர் வரி கட்டவில்லையென்றால்தான் கட்டிப்போட்டு வசூலிப்பார்கள்.

2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு அமைந்த பின்னர், அம்பானி சகோதரர்களுக்குள் சொத்துச் சண்டை வந்தது. `நீ என்னென்ன ஊழல் செய்தாய் என்று நான் அம்பலப்படுத்துவேன்' என்றார் முகேஷ் அம்பானி. `நீ செய்த ஊழல் எனக்குத் தெரியாதா? பட்டியல் வெளியிடுவேன்!' என்றார் அனில் அம்பானி.

இந்த ஊழல் சடுகுடுவின் உச்சகட்ட காட்சியைக் காண நாடு தயாராக இருந்தது. ஆனால், அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மும்பைக்குப் பறந்து சென்றார். அம்பானி சகோதரர்களுக்கிடையே சமரசம் செய்தார். அவர்களுக்கு ஏன் வாய்ப்பூட்டுப் போட வேண்டும்?

இப்போது மீண்டும் அம்பானி சகோதரர்களுக்கு இடையே ரோஷமான குத்துச் சண்டை ஆரம்பமாகி இருக்கிறது.

`அய்யோ! அய்யோ! எரிவாயு விற்பனை மூலம் இந்திய அரசை முகேஷ் அம்பானி ஏமாற்றுகிறார். அதனால் அரசின் எண்ணெய் எரிவாயுக் கழகத்திற்கு 50 ஆயிரம் கோடி நட்டம்' என்று அனில் அம்பானி அறிக்கை வெளியிட்டார்.

முகேஷ் அம்பானி காங்கிரஸ் தலைமையின் செல்லப்பிள்ளை. அனில் அம்பானி முலாயம் சிங்குகளின் வெல்லப்பிள்ளை. பாமரமொழியில் கூறுவதென்றால், முலாயம் சிங்குகள் அனில் அம்பானியின் அரசியல் தரகர்கள்.

சென்றவாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு அம்பானிகளுக்காகவும் நிழல் யுத்தம் நடத்தினர்.

முலாயம்சிங்குகள் அனில் அம்பானிக்காக வாதிட்டார்கள். இன்னொரு சாரார் முகேஷ் அம்பானிக்காக வாதம் செய்தார்கள். ஆனால், இந்த தேசத்திற்காக இடதுசாரிகளைத் தவிர வேறு யாரும் வாதாடவில்லை.

`இந்திய மண்ணிற்குள் கிடைக்கும் எண்ணெய் ஆகட்டும் எரிவாயுவாகட்டும் இதர கனிம வளங்களாகட்டும் அவை அனைத்தும் தேசத்திற்குச் சொந்தம். அதன் மீது உரிமை கொண்டாட எந்தக் கொம்பனையும் அனுமதிக்கக் கூடாது' என்று அவர்கள் வாதிட்டார்கள். பி.ஜே.பி. தியானத்தில் இருந்தது.

அம்பானி சகோதரர்களின் இன்றைய `போர்க்களத்தின்' பின்னணி என்ன? இந்தியாவில் எண்ணெய், எரிவாயு கண்டுபிடிக்கும் பணியை இந்திய அரசின் எண்ணெய் எரிவாயுக் கழகங்கள்தான் செயல்படுத்தி வந்தன.

ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் அந்த உரிமை தனியாருக்கும் வழங்கப்பட்டது. அப்போது பி.ஜே.பி.யின் தேர்தல் கஜானாவாகச் செயல்பட்டது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்தான். ஆகவே, அவர்களுக்கு இல்லாத சர்க்கரைப் பொங்கலா என்று குஜராத்திலும் ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி படுகையிலும் எண்ணெய் எரிவாயு எடுக்கும் உரிமையை பி.ஜே.பி. அரசு அளித்தது.

அந்த ஒப்பந்தம் என்ன தெரியுமா? கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவில் 12 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை இந்திய அரசின் எரிவாயு நிறுவனத்திற்கு அளித்தால் போதும். அனில் அம்பானியின் எரிவாயு (ஆர்.என்.ஆர்.எல்) நிறுவனத்திற்கு 28 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை முகேஷ் அம்பானி அளிக்க வேண்டும். அதற்கு மேல் கிடைக்கும் எரிவாயுவை முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் அறுபது - நாற்பது என்ற சதவிகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வெட்கக்கேடு. இதுதான் வாஜ்பாய் அரசு போட்ட ஒப்பந்தம். எடுக்கப்படும் எரிவாயுவில் 12 சதவிகிதம்தான் இந்திய அரசிற்குச் சொந்தம். மீதி 88 சதவிகிதம் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தம். இந்த ஒப்பந்தம் தேசத்தின் நலனையே மலிவான விலைக்கு விற்பதுதானே? நல்லவேளை மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்திருந்தால் ஜனாதிபதி மாளிகையையே ரிலையன்ஸ் குழுமத்திற்கு விற்றிருப்பார்கள்.

`ஒப்பந்தப்படி முகேஷ் அம்பானி தனக்கு எரிவாயு வழங்கவில்லை' என்று அனில் அம்பானி மும்பை உயர்நீதிமன்றம் சென்றார். உத்தரப்பிரதேசத்தில் தாம் நிறுவி வரும் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த எரிவாயு தேவை என்றும் அனில் அம்பானி வாதிட்டார்.



`அப்படி ஒரு மின் நிலையம் இன்னும் செயல்படவேயில்லை. ஆகவே, எரிவாயு தருவதற்கு இல்லை' என்று முகேஷ் அம்பானி முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தப் பிரச்னையில் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக மன்மோகன்சிங் அரசு செயல்படுவதாக அனில் அம்பானி மைதானத்திற்கு வந்து குற்றப் பத்திரிகை வாசித்தார்.

எரிவாயுவை முகேஷ் அம்பானியே விற்றால் அவருக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று அனில் அம்பானி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார். அவருடைய கவலை என்ன? அந்த ஒரு லட்சம் கோடியில் தனக்குப் பங்கில்லையே என்று பதைக்கிறார்.

இந்த அண்ணன்- தம்பி மல்யுத்தத்தில் ஓர் உண்மை அம்பலத்திற்கு வந்திருக்கிறது. கிருஷ்ணா-கோதாவரித் திட்டம் மட்டும் அவர்களுக்கு ஒரு லட்சம் கோடியை அள்ளித்தரும் என்பதுதான். இது தேசத்தின் கஜானாவிற்கு வரவேண்டிய பணம். இதனை ஒரே ஒரு குடும்பம் வாரிச் சுருட்டுவதற்கு வாஜ்பாய் அரசு வழி வகுத்துத் தந்திருக்கிறது.

இப்படி ஏமாளி ஒப்பந்தம் போட்ட அன்றைக்கு இந்திய அரசின் எரிவாயுக் கழகம் எப்படி ஒப்புக் கொண்டது? எல்லாம் மர்மமாகவே இருக்கிறது. அந்த மர்மங்கள் வெளி உலகிற்கு இனியாவது வர வேண்டும்.

இந்திய எண்ணெய் எரிவாயுக் கழகம் பத்து இடங்களில் துரப்பணப் பணியைத் தொடர்ந்தால் நான்கு இடங்களில் வெற்றி - ஆறு இடங்களில் தோல்வி என்பார்கள்.

அதே சமயத்தில் அம்பானி கம்பெனிகள் பத்து இடங்களில் துரப்பணப் பணிகளை ஆரம்பித்தால் ஒன்பது இடங்களில் வெற்றி - ஒரே ஒரு இடத்தில்தான் தோல்வி என்பார்கள். பத்திற்குப் பத்தும் வெற்றி என்றால் குட்டு உடைந்துவிடும்.

இந்திய அரசிற்கு எரிவாயு கண்டுபிடிப்பவர்களும் என்ஜினீயர்கள்தான். அம்பானி கம்பெனிக்குக் கண்டுபிடித்தவர்களும் என்ஜினீயர்கள்தான்.

எனவே, எண்ணெய் எரிவாயு உற்பத்தியில் தனியார் துறையினர் பெருமளவைத் தள்ளிக்கொண்டு போகும் நிலையில் காரியங்கள் நடைபெறுவதாக அப்போதே சந்தேகங்கள் முளைத்தன. நாம் சாவியைப் பூட்டிலேயே வைத்துவிட்டோம். அவர்கள் உற்பத்தியையும் விநியோகத்தையும் கதவைத் திறந்து கடத்திக் கொண்டு போகிறார்கள்.

நாடு முழுமையும் ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோல் `பங்க்'குகளைத் திறந்தது. திறந்த வேகத்தில் மூடியது. இப்போது அவர்கள் எடுக்கின்ற பெட்ரோல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அப்படியானால் நாட்டின் தேவை?

நாடு கடந்து செல்லும் அந்த பெட்ரோல் மீண்டும் வெளிநாட்டு முகமூடியோடு இந்தியாவிற்கு வருகிறது. சர்வதேசச் சந்தை நிலவரப்படி கொள்ளை விலைக்கு விற்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு.

இந்தியாவிலேயே ரிலையன்ஸ் நிறுவனம்தான் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வைத்திருக்கிறது. அந்த நிலையம் திறக்கப்பட்ட அடுத்த நாளே, இன்றைய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவும் முகேஷ் அம்பானியும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார்கள். ஆமாம். அவர்கள் அவ்வளவு ஆத்ம நண்பர்கள்.

முரளி தியோராவிடம் ரிலையன்ஸ் நிறுவனம் நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை வைத்திருக்கிறது. இந்திய அரசின் பெட்ரோல் நிலையங்களும் சர்வதேசச் சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கையாகும்.

இதன் பொருள் என்ன? பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது, அதற்கு மானியம் அளிக்கக் கூடாது என்பதாகும். இனியும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் நாடு எரிமலையாகும். ஆனால், அம்பானிகளுக்கு அதனைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. விருப்பம் போல பெட்ரோல் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் காண வேண்டும். ஆகவே, அரசின் எண்ணெய் விற்பனை நிலையங்களும் அதற்கு ஏற்ப விலையை உயர்த்தி விற்க வேண்டும் என்கிறார்கள்.

இப்போது கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எடுக்கும் எரிவாயுவிற்கு சர்வதேசச் சந்தை விலை தர வேண்டும் என்கிறார் முகேஷ் அம்பானி. அந்த வகையில் அண்ணனுக்கு அனில் ஆதரவுதான்.

இங்கே மலிவாக எடுக்கின்ற எரிவாயுவுக்கு நாம் ஏன் சர்வதேசச் சந்தை விலை தரவேண்டும்? அமெரிக்காவில் ஒரு சிலிண்டர் எரிவாயு விலை 435 ரூபாய். இறக்குமதி செய்து இங்கே விற்கும் ஒரு சிலிண்டர் எரிவாயுவுக்கு 300 ரூபாய் என்று விலை வைத்திருக்கிறோம்.

நாட்டின் சொத்தான எரிவாயு உற்பத்தி விற்பனை விலை மீது உரிமை கொண்டாட அம்பானிகளுக்கு அதிகாரம் இல்லை. அதனைத் தங்கள் குடும்பச் சொத்தாக்க அவர்கள் முயல்கிறார்கள்.

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வந்தது. அதன்மீது மத்திய அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கோரியது.

கிருஷ்ணா-கோதாவரிப் படுகை உள்பட கிடைக்கும் எரிவாயு அனைத்தும் நாட்டின் சொத்து என்று இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. வரவேற்க வேண்டிய, வாழ்த்த வேண்டிய முடிவு.

`எரிவாயுவின் விலையை நிர்ணயிப்பதற்கும் விநியோகத்திற்கும் இந்திய அரசிற்குத்தான் முழு உரிமை உண்டு' என்று சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்திருக்கிறார்.

`அம்பானிகளின் குடும்பச் சண்டையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. அதே சமயத்தில் எரிவாயுவை அவர்கள் தங்கள் குடும்பச் சொத்தாக்க முயல்வதைத் தடுப்போம்' என்றும் அவர் கூறியிருக்கிறார், வரவேற்போம்.

பொதுத்துறை நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையம் கிருஷ்ணா-கோதாவரிப் படுகை தரும் இயற்கை வாயுவை விநியோகிக்கும் உரிமையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேசத்தின் சொத்தை ஒரு குடும்பம் கொள்ளையடிப்பதைத் தடுக்க முடியும்.

அவலத்திலும் அவலம்!

சிறார்களுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்ட மசோதா, ஏற்கெனவே பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் களையப்படாமல், அதே வடிவத்தில் மக்களவையில் நிறைவேறியுள்ளது. அதன் குறைபாடுகள் பின்னாளில் பன்முகச் சிக்கல் கொள்ளும்போது மீண்டும் சட்டத் திருத்தம் கொண்டுவந்துவிடலாம் என்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கக்கூடும்.

இந்த மசோதாவில் முக்கியமான குறைபாடுகள் நான்கு உள்ளன. அவை-

1. 6 முதல் 14 வயது வரை எனப்படும் கால அளவு; 2. தனியார் பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்குமா என்பதில் தெளிவு இல்லாமல் இருப்பது; 3. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்காக ஒதுக்கப்படும் என்று சொன்னால், அது யாருக்காக, எந்த அடிப்படையில், எந்த விகிதசாரத்தில் என்பது தெளிவுபடுத்தப்படாதது; 4. கற்பித்தலுக்கு ஆசிரியரைப் பொறுப்பேற்கச் செய்யும் நிர்பந்தம் இல்லாமல் இருப்பது.

இந்த நான்கு குறைபாடுகளும் இந்த மசோதா பயனற்றுப் போகச் செய்யும் வல்லமை கொண்டவை.

முதலாவதாக, 6 முதல் 14 வயது வரை என்ற காலஅளவு அர்த்தமற்றது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் 3 வயதிலேயே குழந்தைகளை நர்சரி பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள். இப்போது இந்தச் சட்டத்தை 3 வயது முதலாக என்று திருத்தியிருந்தால், தற்போது ஆங்காங்கே இருக்கும் பாலர் பள்ளிகளை இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் ஏற்படச் செய்து, கிராமக் குழந்தைகளும் 3 வயது முதலாகவே கட்டாயமாகப் பள்ளி செல்லவும், செயல்வழிக் கற்றல், விளையாட்டு வழியில் கற்றல் ஆகியவற்றால் அறிவை மேம்படுத்திக் கொண்டு 6-வது வயதில் முதல் வகுப்பில் நுழையவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

மேலும், உயர்கல்வியின் தொடக்கப் படி என்று அழைக்கப்படும் மேல்நிலைப் பள்ளியை (சில மாநிலங்களில் ஜூனியர் காலேஜ் என்கிறார்கள்) எட்ட வேண்டுமானால் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த மசோதாவின்படி 14 வயதில், அதாவது 9-ம் வகுப்புடன் கட்டாய இலவசக் கல்வி முடிந்து போகிறது. அதன்பிறகு பள்ளியையோ அல்லது மாணவரையோ கட்டுப்படுத்தும் அதிகாரத்தைச் சட்டம் இழந்துவிடுகிறது. இந்த மசோதாவை வயதுகளால் நிர்ணயிக்காமல், "10-ம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி' என்று ஒரே வரியில் திருத்தியிருந்தால், 20 வயது இளைஞன்கூட 10-ம் வகுப்பை முடித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

அடுத்துவரும் மிகப் பெரிய கேள்வி- தற்போது கொள்ளை லாபத்தில் செயல்பட்டுவரும் தனியார் நர்சரி பள்ளிகள் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தொடர்ந்து அபரிமிதமான கட்டணத்தை வசூலித்துக்கொண்டே இருக்குமா அல்லது இலவசக் கல்வியை வழங்குமா? என்பதுதான். மத்திய அரசின் இந்த மசோதா அது பற்றி தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.

தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆங்கில வழிக் கல்வி என்ற போர்வையில், தொடர்ந்து உயர் வருவாய் பிரிவினரின் குழந்தைகளுக்கு அபரிமிதமான கட்டணங்களை வசூலித்துக் கொண்டு கற்பிக்கும் சேவையைத் தொடர்ந்து நடத்துவதற்கு நமது அரசியல்வாதிகள் நிச்சயம் துணை போவார்கள். இதனால் தற்போது தமிழ்நாட்டில் காணப்படுவதைப் போலவே, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவரின் கல்வித் திறனுக்கும் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் கல்வித் திறனுக்கும் காணப்படும் மிகப்பெரும் இடைவெளி, இந்தியா முழுவதிலும் இருக்கப்போகிறது.

மக்களவையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் குறிப்பிடுகையில், "இந்தியாவில் தொடக்கப் பள்ளிகளில் சேரும் 100 மாணவர்களில் 12 பேர்தான் உயர்கல்விக்கு வருகிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 50 முதல் 70 ஆக இருக்கிறது. உலகின் சராசரி எண்ணிக்கை 27 ஆக இருக்கிறது. இந்தியாவில் 2012-ம் ஆண்டில் உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 முதல் 35 சதவீதமாக உயர வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம்' என்று கூறியிருக்கிறார்.

அதாவது, இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே- உயர்கல்வியை ஆக்கிரமித்துள்ள தனியார் கல்லூரிகளுக்கு ஆள்அனுப்பும் வேலைதான்.

கல்வி கட்டாயம், ஆனால் அறிவு கட்டாயமல்ல என்பதுதான் இந்த மசோதாவின் மிகப்பெரிய குறைபாடு. மசோதாவின் குறைபாடுகளைப் பார்க்கும்போது தனியார் கல்லூரிகளுக்கும்கூட இந்தச் சட்டம் பயனுள்ளதாக அமையுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பது சரி. அதற்காக நாம் கொடுக்க இருக்கும் விலை என்ன தெரியுமா? பணமிருந்தால் மட்டுமே உயர்கல்வி என்கிற அவலநிலை. இதற்கு அரசே துணை போகிறது என்பதுதான் அவலத்திலும் அவலம்!

புதன்

நீதி நிலைதடுமாறுகிறதே...!

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதல் வன்முறையில் முடிந்தது உலகறிந்த உண்மை. அத்தனை தொலைக்காட்சி அலைவரிசைகளும் தொடர்ந்து ஒளிபரப்பி, தமிழகத்தின் மானத்தை உலக அரங்கில் சந்தி சிரிக்க வைத்த சம்பவம் அது. இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா, வேண்டாமா?
காக்கிச் சட்டைகளும், கறுப்புக் கோட்டுகளும் வரிந்து கட்டிக்கொண்டு, ரௌடிகள்போல நடந்து கொண்டனர் என்பது மட்டுமல்ல, கௌரவத்திற்குரிய உயர் நீதிமன்ற நீதிபதியே கல்வீச்சில் காயமடைந்த கீழ்த்தரமான செய்கை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறவும் செய்தது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தை வழக்குரைஞர்கள் தங்களது அரசியல் மனமாச்சரியங்களை வெளிப்படுத்தும் இடமாக்க ஆரம்பம்முதலே உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனுமதித்திருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் வழக்குரைஞர்களிடம் காட்டிய மெத்தனப் போக்குதான், நீதிமன்ற வளாகத்தில் எத்தகைய செயலில் ஈடுபட்டாலும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்கிற தைரியத்தை அவர்களுக்கு அளித்தது என்றும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை தெளிவுபடுத்தியது.
சட்டத்துக்குத் தாங்கள் அப்பாற்பட்டவர்கள் என்று கருதும் வழக்குரைஞர்களை வன்மையாகக் கண்டித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை, காவல்துறையினரின் அத்துமீறல்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ""வன்முறையில் ஈடுபட்ட வழக்குரைஞர்களைக் கலைத்த பின்னரும் காவல்துறையினர் தொடர்ந்து தடியடி நடத்தினர் என்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற வாகனங்கள், வழக்குரைஞர்களின் அலுவலகங்கள், ஏன் நீதிபதிகள்கூட காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆள்பட நேர்ந்தது என்றது அந்த அறிக்கை.
நீதிமன்ற வளாகத்தில் தடியடி நடத்தவோ, அத்துமீறி நடந்து கொள்ளவோ காவல்துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்று கேள்வி எழுப்பிய அந்த அறிக்கை, நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் அத்துமீறிய செயல்களை வன்மையாகக் கண்டித்தது. தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, தான் தொடர்ந்து இந்த விசாரணையில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த எந்த சிபாரிசையும் உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ நடைமுறைப்படுத்தவில்லை. ஒரு சில வழக்குரைஞர் சங்கங்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சம்பவத்துக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் இருவரைப் பணி நீக்கம் செய்ய அரசுக்குப் பரிந்துரைத்து நீதிபதிகள் முகோபாத்யாயா, தனபாலன், சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அந்தக் காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தையே அணுகும்படி கூறப்பட்டது.
அரசாவது அந்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்ததா என்றால், ஊஹும். உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை சட்டை செய்யவே இல்லை. இரண்டு அதிகாரிகளும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இதுதான் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் சிபாரிசுக்குத் தரும் மரியாதை!
தாங்கள் எந்தத் தீர்ப்பளித்தாலும், தமிழக அரசு அந்தத் தீர்ப்புக்கு மதிப்புத் தரப்போவதில்லை என்பது நீதிபதிகளுக்கு உறுதியாகிவிட்டது காரணமா, இல்லை வழக்குரைஞர்களுக்கோ, காவல்துறையினருக்கோ எதிராகப் பாரபட்சமில்லாமல் தீர்ப்பு வழங்கி அவர்களது விரோதத்தை நாம் ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்கிற தயக்கமா என்று தெரியவில்லை, நீதிபதி சந்துருவில் தொடங்கி மூன்று பேர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, தாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
விருப்பு வெறுப்பில்லாமல், தங்கள் முன் வருகின்ற வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதுதானே நீதிபதிகளின் கடமை? பயம் காரணமாகவோ, சிலரது அதிருப்திக்கு ஆளாகிவிடுவோமே என்கிற சுயநலம் காரணமாகவோ, நமது தீர்ப்பு நிறைவேற்றப்படாது என்கிற அவநம்பிக்கை காரணமாகவோ, ஒரு குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பளிக்க விரும்பவில்லை என்று நீதிபதி ஒருவர் சொல்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, ""நான் இந்த விசாரணையைத் தொடர விரும்பவில்லை'' என்று ஒதுங்குகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் தாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நழுவுகிறார்கள். எந்த ஒரு வழக்கையும் விசாரித்து, சட்டம், நீதி, நேர்மை ஆகிய அளவுகோல்களைப் பயன்படுத்தித் தீர்ப்பளிக்க முடியாதவர்கள், ஒதுங்கக் கூடாது. பதவி விலக வேண்டும். அதுதானே முறை?

ஆபத்தின் அறிகுறி!

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தைப் பற்றிய ஒரு செய்திக் குறிப்பு, விவரம் அறிந்த பலரையும் திடுக்கிட வைத்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாகக் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 450 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பிரச்னையில் மத்தியப் பிரதேசம் மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த சாதனையே வேதனைக்குரியதாகத்தான் தொடர்கிறது.

ஐந்து வயதுக்குக் குறைந்தவர்களில் 38 விழுக்காடு குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாதவர்களாகவும், 15 விழுக்காடு குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம், உடல் வளர்ச்சி இல்லாமலும் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. மொத்தத்தில் எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 43 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் போதிய எடை இல்லாமல் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. அதிகரித்து வரும் வறுமையும், அதிகரிக்காத உணவு உற்பத்தியும் வர இருக்கும் மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறிகள் என்று சுட்டிக்காட்டி இருக்கும் எம்.எஸ். சுவாமிநாதன், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால், இவற்றை ஒட்டுமொத்தமாகக் கருதித்தான் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்கிறார். ""நீர்மூழ்கிக் கப்பல்களும், விண்கலன்களும் செய்து நம்மால் சாதனை படைக்க முடியுமானால், உணவுப் பாதுகாப்பை மட்டும் ஏன் உறுதி செய்ய முடியவில்லை?'' என்பது அவரது நியாயமான கேள்வி.

வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென்னும் இந்தப் பிரச்னையை இன்னொரு கோணத்தில் அணுகுகிறார். ""ஊட்டச்சத்துக் குறைவை எதிர்கொள்ள வேண்டுமானால், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பெண்கள் பிரச்னைகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவில் புறக்கணிக்கப்படும் இரண்டு முக்கிய விஷயங்கள், ஊட்டச்சத்துக் குறைவும், அனைவருக்கும் உணவு முறையாகக் கிடைக்க வழி செய்யாமல் இருப்பதும்தான்'' என்பது அமார்த்தியா சென்னின் கருத்து.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உணவு என்பது கல்வி மற்றும் வேலையைப்போல ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக்கப்படுகிறது. இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ ரூ. 3 வீதம் மாதமொன்றுக்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை தரப்படுகிறது. சட்டம் இயற்றினால் மட்டும் போதுமா? ஒருசில மாநிலங்கள் தவிர, இந்தியாவில் முறையாகப் பொது விநியோக முறையே நடைமுறைப்படுத்தப்படாதபோது, இப்படி ஒரு சட்டத்தால் என்ன பயன்?

வறுமைக்கோட்டுக்குக் கீழே என்று சொல்லப்படும் விதிமுறையின்கீழ், வீடும், விலாசமும் இருப்பவர்கள்தானே வரமுடியும்? வீதியில் வாழ்வோர் இந்திய மக்கள்தொகையில் 20 விழுக்காட்டுக்கும் மேல் என்பதைப் பற்றியோ, அவர்கள் உண்ண உணவும், உடுக்க உடையும், செய்யத் தொழிலும் இல்லாமல், தெருவோரச் சிறார்களை உருவாக்கும் உன்னதப் பணியில் மட்டுமே ஈடுபட்டிருப்பதைப் பற்றியோ, ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தானே கவலைப்படுகின்றன!

காமராஜ் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிமுகப்படுத்தி இன்றுவரை தொடர்ந்து நடைபெறும் சத்துணவுத் திட்டமும் தமிழகத்தில் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைவதற்கு வழிகோலின. தமிழகத்தைப் பார்த்து முந்தைய வாஜ்பாய் அரசு, இந்தத் திட்டத்தை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது, பல மாநிலங்களில் இப்போது இந்தத் திட்டம் செயல்படுகிறது என்பது ஆறுதலான விஷயம்.

அதேபோல, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ், தாய்மை அடையும் மகளிருக்கு மாதமொன்றுக்கு ரூ. 1,000 வீதம் ஆறு மாதங்கள் உதவித்தொகை அளிப்பது என்கிற அற்புதமான திட்டத்தை இப்போதைய தமிழக அரசு அறிவித்துச் செயல்படுத்தவும் செய்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தனியார்மயப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தைத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தில் காட்டுவதில்லை என்கிற சந்தேகம் சமீபகாலமாக எழுந்திருக்கிறது.

கர்ப்பமடைந்து ஆறாவது மாதத்திலிருந்து மாதந்தோறும் தரப்பட வேண்டிய ஆயிரம் ரூபாய் பலருக்கும் குழந்தை பிறந்து ஓராண்டான பிறகுதான் பல்வேறு சிக்கல்களுக்கிடையில் தரப்படுகிறது என்று கேள்வி. தாயாருக்கு ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் எப்படி ஊட்டமாக பிறக்கும்?
நமது மூதாதையர்கள், புண்ணியம் என்ற பெயரிலும், மதத்தின் கோட்பாடு என்றும் வசதி படைத்தவர்களை ஆங்காங்கு அன்னசத்திரங்கள் கட்டி வைக்கச் சொன்னதன் காரணம் இப்போதல்லவா புரிகிறது!

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

எங்கிருந்து வருகிறது என்பது எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த எதிரி நாட்டில் உள்ள இலக்குகளைத் தாக்கி நிர்மூலம் செய்யக்கூடிய சக்திமிக்க ஆயுதம் இருக்க முடியுமா? அதுதான் உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுஆயுத ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இதை பிரும்மாஸ்திரம் என்றும் வர்ணிக்கலாம். இந்தியா இப்போது இவ்விதமான நீர்மூழ்கிக் கப்பலை (சப்மரீன்) உருவாக்கியுள்ளது. அது அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.உலகில் இப்போது அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் இவ்வகை சப்மரீனைத் தயாரித்துள்ளது. இதை உருவாக்க இந்தியா பெரும்பாடுபட்டது என்று சொல்லலாம்.டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் சாதாரண சப்மரீன்களைக் கட்டுவது என்பது எளிது. ஆனால் அணுசக்தியால் இயங்கும் சப்மரீனைக் கட்டுவது என்பது எளிதல்ல. இந்தியா டீசலினால் இயங்கும் சப்மரீன்களை ஏற்கெனவே தயாரித்து வருகிறது. டீசல் சப்மரீன்களை வெளிநாடுகளிடமிருந்து விலைக்கு வாங்க இயலும். ஆனால், அணுசக்தி சப்மரீன்களை எந்த நாடும் விற்பது கிடையாது. அதைத் தயாரிப்பதற்கு உதவி அளிப்பதும் கிடையாது. ஆகவே இந்தியா சொந்தமாக அணுசக்தி சப்மரீனை வடிவமைத்துத் தயாரிக்க வேண்டியதாயிற்று.டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சப்மரீன்களால் தொடர்ந்து பல நாள்கள் நீருக்குள் மூழ்கியபடி செல்ல இயலாது. ஏனெனில் அடிக்கடி டீசலை நிரப்பியாக வேண்டும். நீருக்குள் இருக்கும்போது டீசல் எஞ்சின் இயக்கப்படுவதில்லை. அது சத்தம் எழுப்பும். அதன் காரணமாக அது இருக்கின்ற இடத்தை எதிரி சப்மரீனால் கண்டுபிடித்து எளிதில் தாக்க இயலும்.இரண்டாவதாக டீசல் எஞ்சின் இயங்குவதற்கு காற்று அதாவது ஆக்சிஜன் தேவை. ஆகவே, மேலே வந்து நீரில் மிதந்த நிலையில் டீசல் எஞ்சின்கள் இயக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் நீருக்குள் மூழ்கிய நிலையில் பாட்டரி மூலம் - மின்சாரம் மூலம் சப்மரீன் செயல்படும். இக் காரணத்தால் இந்த வகை சப்மரீன்கள் டீசல் - எலக்ட்ரிக் சப்மரீன் என்று அழைக்கப்படுகின்றன. எதிரியால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அதனால் இயங்க இயலாது.அணுசக்தி சப்மரீன் இந்த வகையில் மேலானது. இந்த சப்மரீனில் அணுசக்திப் பொருள் அடங்கிய அணு உலை ஒன்றைப் பொருத்திவிட்டால் போதும். மறுபடி 10 அல்லது 30 ஆண்டுகளுக்கு எரிபொருள் பிரச்னையே இராது. அணுசக்தி சப்மரீன் ஒன்றினுள் போதுமான உணவுப் பொருள் இருக்குமானால் அது தாய்த் துறைமுகத்துக்கு வராமல் நீருக்குள் இருந்தபடி உலகைப் பலமுறை சுற்றி வரலாம். அணுசக்தி சப்மரீன் நீருக்குள் இயங்கும்போது ஒலி எழுப்பாது. அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலை இயங்குவதற்கு காற்று தேவையில்லை. எனவே நீருக்கு அடியிலிருந்து வெளியே தலைதூக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீருக்குள் கடலுக்குள் எங்கிருக்கிறது என்பதை அனேகமாகக் கண்டுபிடிக்க இயலாது.அணுசக்தி சப்மரீனில் 12 நீண்ட தூர ஏவுகணைகள் இடம்பெறும். இவை ஒவ்வொன்றின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்த முடியும். இந்த சப்மரீன் அட்லாண்டிக் கடல், பசிபிக் கடல், இந்துமாக் கடல் என உலகின் எந்த ஓர் இடமாக இருந்தாலும் அங்கே இருந்தபடி எதிரி நாட்டை நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.அமெரிக்கா, ரஷியா முதலான நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்கள் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவுகணைகளைப் பெற்றுள்ளன. இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீனில் இப்போதைக்கு 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளே இடம் பெறும். எதிர்காலத்தில் மேலும் அதிக தொலைவு செல்லும் ஏவுகணைகள் இடம்பெறலாம்.இந்தியா அணுசக்தி சப்மரீனை உருவாக்க சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகின. பல பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததே இதற்குக் காரணம். மின்சார உற்பத்திக்கான அணுஉலைகளை உருவாக்குவதில் இந்தியாவுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால் மின்சார நிலையங்களுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. சப்மரீனுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. மின்சார நிலையங்களுக்கான அணு உலைகள் வடிவில் பெரியவை. பொதுவில் அணு உலைகள் கடும் கதிர்வீச்சை வெளிப்படுத்துபவை. இக் கதிர்வீச்சு ஆபத்தானவை. பெரிய அணுமின் நிலையங்களில் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படாதபடி தடுக்க கனத்த சுவர்கள் இருக்கும்.இவற்றுடன் ஒப்பிட்டால் அணுசக்தி சப்மரீனில் இடம்பெறுகின்ற அணு உலையானது வடிவில் சிறியதாகவும் சக்திமிக்கதாகவும் உள்ளது. சப்மரீனில் பணியாற்றுகின்ற ஊழியர்களை கதிர்வீச்சு தாக்காதபடி சிறப்பான பாதுகாப்பு உள்ளது.சப்மரீனில் இடம்பெறும் அணு உலையில் பயன்படுத்தப்படுகிற அணுசக்திப் பொருள் வேறானது. பொதுவில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் சப்மரீனின் அணு உலையில் இடம்பெறும். இந்தியா இதையும் தயாரிக்க வேண்டி வந்தது.அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலையில் செறிவேற்றப்பட்ட யுரேனியப் பொருள் கடும் வெப்பத்தை வெளியிடும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீராவி ஒரு டர்பைனை இயக்கும். இதன் பலனாக சப்மரீனில் சுழலி இயங்க சப்மரீன் நீருக்குள் இயங்கும். அத்துடன் இந்த டர்பைன் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் கடல் நீரைக் குடிநீராக்க முடியும். சப்மரீனுக்குள் இருக்கும் காற்றைச் சுத்திகரிக்க இயலும்.சப்மரீனுக்கான அணு உலை எடை மிக்கது. ஆகவே சப்மரீனில் ஸ்திர நிலை பாதிக்கப்படாத வகையில் அணு உலை சப்மரீனில் நடுப்பகுதியில் இடம்பெறும். அந்தவகையில் சப்மரீன் வடிவமைக்கப்படுகிறது. இந்தியா இது தொடர்பான பிரச்னையை வெற்றிகரமாகச் சமாளித்தது. இப்போது இந்திய அணுசக்தி சப்மரீனில் இடம்பெறும் அணு உலை கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.சப்மரீனைக் கட்டுவதற்கான விசேஷ வகை உருக்கைப் பெறுவதிலும் இந்தியாவுக்குப் பிரச்னை ஏற்பட்டது.எல்லா வகை சப்மரீன்களிலும் ஒருவகை சோனார் கருவிகள் உண்டு. இவை ஒலி அலைகளை வெளிப்படுத்தும். இந்த ஒலி அலைகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள சப்மரீன்கள் மீது பட்டு எதிரொலித்துத் திரும்புவதை வைத்து அந்த சப்மரீன்களைக் கண்டுபிடித்து விட முடியும். எதிரி சப்மரீனின் சோனார் கருவிகளை ஏமாற்றும் வகையில் இந்திய சப்மரீனின் வெளிப்புறத்தில் நுண்ணிய துளைகள் கொண்ட ரப்பர் பொருள் ஒரு பூச்சாக அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே இந்திய அணுசக்தி சப்மரீனை எதிரி சப்மரீன்களால் எளிதில் அடையாளம் காண முடியாது.இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரிக்கும் திட்டம் நீண்ட காலம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் இந்த சப்மரீன் பற்றிய தகவல்கள் வெளியே தெரிய வந்துள்ளன.இந்தியாவின் டீசல் - எலக்ட்ரிக் சப்மரீன்களால் அதிக தொலைவு செல்ல இயலாது என்ற காரணத்தால் அவை இந்தியக் கடலோரப் பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. இப்போது இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீன் உலகின் எந்த மூலைக்கும் செல்லக்கூடியது. இதுபோன்று மேலும் பல அணுசக்தி சப்மரீன்களைக் கட்டுவதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது. இவையும் கடலில் இயங்க ஆரம்பித்ததும் எந்த நாடும் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயங்கும்.எந்த ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் சரி, எந்தவிதத் தொழில் நுட்பமாக இருந்தாலும் சரி, அது அணுசக்தி தொடர்பான பணிக்குப் பயன்படுத்தப்படலாம் என்றால் அதை யாரும் இந்தியாவுக்கு வழங்கக்கூடாது என அமெரிக்கா விதித்த தடை (இந்தியா - அமெரிக்கா அணுசக்தி உடன்பாடு கடந்த ஆண்டில் கையெழுத்தானது வரையில்) அமலில் இருந்த காரணத்தால் அணுசக்தி சப்மரீன் தொடர்பாக வெளிநாடுகளிலிருந்து பல பொருள்களை காசு கொடுத்தாலும் வாங்க முடியாது என்ற நிலை இருந்தது. இப்படியான பல பிரச்னைகளைச் சமாளித்துத்தான் இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரித்துள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

என் முதல் பதிப்பு

எனக்கு இது முதல் பதிவு
ஒரு சராசரி இந்திய அரசியல்வாதிக்கும் மிகச் சிறந்த பிரெஞ்சு சமூகவியல் சிந்தனையாளருக்கும் முடிச்சு போடுவது நகைப்புக்குரியதாக இருக்கலாம். ஆனால், நடந்து முடிந்த மாநிலங்களவைக் கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் கமல் அக்தர் முன்வைத்த சில கருத்துகள்,ஆண் பால் சார்த்ருக்குப் பின்னர் பிரெஞ்சு சமூகத்தின் பெரிய அறிவுஜீவியாக மதிக்கப்படும் சமூகவியல் சிந்தனையாளர் பியர் பூர்தியுவின் கருத்துகளை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கடந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் முடிந்தபிறகு பேசிய அக்தர், பார்வையாளர்களைக் கவருவதற்காக (டிஆர்பி) தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்கொள்ளும் அத்துமீறல்கள் குறித்து பிரச்னையைக் கிளப்பினார்.
இதற்கு உதாரணமாக தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் பிரபலமாகிவரும் "சச் கா சாம்னா' (உண்மையை எதிர்கொள்) நிகழ்ச்சியை அக்தர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சி ஓர் அசல் காட்சி (ரியாலிட்டி ஷோ) வகை நிகழ்ச்சியாகும். அண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண்ணிடம் அவருடைய கணவரின் முன்னிலையிலேயே நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்வி: ""உங்கள் கணவரைத் தவிர்த்து வேறு எவருடனும் நீங்கள் உறவு கொண்டிருக்கிறீர்களா?''
இதற்கு அந்தப் பெண் அளித்த பதில்: ""இல்லை.''
ஆனால், உண்மையைக் கண்டறியும் சோதனை (பாலிகிராஃப் டெஸ்ட்) அந்தப் பெண் பொய்யான பதிலை அளிப்பதாகக் கூறியது.
இத்தனையும் தொலைக்காட்சியில் அந்தப் பெண்ணின் கணவரின் முன்னிலையிலேயே அரங்கேறியது. இந்நிகழ்ச்சி அந்தத் தம்பதியின் வாழ்வில் எத்தகைய மோசமான ஓர் அனுபவமாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
மாநிலங்களவையில் அக்தர் இதைக் குறிப்பிட்டார். சமூகத்துக்கு எதிரான பெரிய தீய சக்தியாக தொலைகாட்சி அலைவரிசைகள் மாறிவருவதைச் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அரசு எடுக்கப்போகும் எதிர் நடவடிக்கை என்னவென்று கேள்வி எழுப்பினார். இத்தகைய சூழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிலையும் ஏறத்தாழ இப்படித்தான் இருக்கிறது. தமிழ் நகைச்சுவைத் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் அண்மையில் இப்படி ஒரு காட்சியைக் காண நேர்ந்தது. சாலையில் செல்வோரையெல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் துடைப்பத்தால் அடிக்கிறார். அதாவது, கையில் துடைப்பத்துடன் செல்லும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சாலையில் வருவோர் - போவோர் மீதெல்லாம் அந்த துடைப்பம் படுமாறு செல்கிறார்.
இதற்கு அந்த அப்பாவிகள் காட்டும் எதிர்வினையைக் காட்டி எல்லோரையும் சிரிக்கச் சொல்கிறார்கள்.
தொலைக்காட்சி என்ற ஊடகம் தனி மனித வாழ்க்கையின் மீதும் சமூகத்தின் மீதும் செலுத்தும் அடையாள வன்முறைக்கு எளிய உதாரணங்களாக இந்நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இதற்கு முக்கியமான காரணம், தொலைக்காட்சி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் அதீதமான சுதந்திரமும் அதை நம் அரசும் சமூகமும் அனுமதிப்பதுமாகும்.
பொதுவாகவே, பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் தமக்கும் பொருந்தும் என்று தொலைக்காட்சி அலைவரிசைகள் (அவை பொழுதுபோக்கு அலைவரிசைகளானாலும்கூட) கற்பிதம் செய்துகொள்கின்றன.
பெரும்பாலான அலைவரிசைகள் செய்திகளையும் கொஞ்ச நேரம் ஒளிபரப்புவதால் அல்லது கூடுதலாக ஒரு பிரத்யேக செய்தி அலைவரிசையையும் நடத்துவதால் இது நியாயமானதாகவும்கூட வாதிடப்படுகிறது.
ஆனால், பொறுப்புணர்வு என்ற தளத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் எதையுமே பொருட்படுத்தத் தயாராக இல்லை.
இதன் மோசமான விளைவு என்னவென்றால், தொலைக்காட்சி அலைவரிசைகளின் அதே பொறுப்பற்றதனமும் வியாபாரப் போட்டியும் பத்திரிகைத் துறையையும் பீடிக்கத் தொடங்கியிருப்பதுதான்.
தேசிய அளவிலான பிரபல இதழொன்று சில மாதங்களுக்கு முன் பாலியல் சிறப்பிதழ் வெளியிட்டது. இதற்காக, ""இந்தியாவில் அதிகமான ஆண்கள் உறவுகொள்ள ஏங்கும் பெண் பிரபலம் யார்'' என்ற ஆய்வை (?!) மேற்கொண்ட அந்த இதழ், ஆய்வின் முடிவாக ஐஸ்வர்யா (பச்சன்) பெயரை அவருடைய கவர்ச்சியான படத்துடன் வெளியிட்டது (எப்பேர்ப்பட்ட முற்போக்குப் பத்திரிகையாளரும் தன் மனைவியைப் பற்றி இப்படியொரு செய்தியை அனுமதிப்பார் என்று தோன்றவில்லை).
அதாவது, போட்டியை எதிர்கொள்ள - சந்தையைக் கையகப்படுத்த எந்தவொரு நிலைப்பாட்டுக்கும் ஊடகத் துறை தயாராக இருக்கிறது. தொலைக்காட்சி அலைவரிசைகள் இதை முன்னெடுக்கின்றன; ஒட்டுமொத்த ஊடகத் துறையையும் தம்மோடு சேர்த்து இழுக்கின்றன.
பூர்தியு இதைத்தான் சொன்னார்: ""ஊடக உலகம் ஒரு களம். ஆனால், தொலைக்காட்சி அலைவரிசைகளோ பார்வையாளர் கணிப்பின் வாயிலாக பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன'' என்றார். பொருளாதாரத் தேவையின் சுமை தொலைக்காட்சி அலைவரிசைகளை அழுத்துகிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளின் சுமை மற்ற பத்திரிகைகள் மீதும் இதழாளர்கள் மீதும் அழுத்தப்படுகிறது'' என்றார். மேலும் ""ஜனநாயகத்தின் பெயரால் இத்தகைய சூழலுக்கு எதிராக நாம் போராட வேண்டும்'' என்கிறார் அவர்.
அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பகுத்துப் பயன்படுத்தத் தெரிந்த ஐரோப்பிய சமூகத்தின் முன், உன்னதங்களைப் பற்றி அக்கறையோடு பேசும் பிரெஞ்சு சமூகத்தின் முன் நின்று இப்படி அறைகூவல் விடுத்தார் பூர்தியு.
அக்தரோ, அரசியல் கனவு வந்த அடுத்த க்ஷணமே தொலைக்காட்சி அலைவரிசையையோ, பத்திரிகையையோ தொடங்கத் திட்டமிடும் இந்தியச் சமூகத்தின் முன் நின்று அறைகூவல் விடுக்கிறார். ஜனநாயகத்தின் பெயரால் நாம் போராடித்தான் ஆக வேண்டும்!