வியாழன்

வளைகுடா வாழ்க்கை.. வரமா? சாபமா??

"பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு
எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்போது
வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம் நெஞ்சங்களில்.
படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர
அனைத்திலும் ஆர்வம் கொண்டு
அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால்
பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை
கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம்.
கண்காணாத் தொலைவில் இருப்பதால்
நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.
வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம்.
மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும்
நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் – குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த"
-இதே புலம்பல்தான் தினந்தோறும்

அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒருநாள் அணையும்
ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல்
காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம்
ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும்
என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால்
வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும்
வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவான்
உடனே செல்ல வேண்டும்
இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவான்
அப்படி இல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவான்
-இதே புலம்பல்தான் தினந்தோறும்


குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும்
அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம்
பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத் தாய் நாடு சென்றால் மட்டும்
வாலிபங்கள் துள்ளும் வயதில் வசந்தத்தினைக் காணாமல்
வானுயர்ந்த கட்டடங்களை காணுகிறோம்
நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள்
உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்
பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம்
அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது
சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டு
கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்
-இதே புலம்பல்தான் தினந்தோறும்