ஞாயிறு

தயாராகிறதா புது இயக்கம் ?



ஈழத்துத் தமிழ் மக்களுக்குப் போராடுவதற்காக விடுதலைப்புலிகளைப் போல ஒரு புதிய இயக்கம் முளைத்திருக்கிறது. ""மீண்டும் ஆயுதப் போராட்டம்.ஈழம்தான் இறுதி லட்சியம்'' என்று அறிவித்துள்ளது. ""மக்கள் விடுதலைப்படை'' என்ற இந்தப் புதிய இயக்கம்.
யார் இவர்கள் ? இவர்களை நம்பலாமா?
கிழக்கு மாகாண காட்டுப் பகுதியில் மறைந்திருந்து செயல்படுவதாக சொல்லப்படும் மக்கள் விடுதலைப்படையின் தளபதி கோணேஸின் பேட்டி, கடந்த வாரம் ""தி டைம்ஸ்'' பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. ""கடந்த மே மாதத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் ""மக்கள் விடுதலைப்படை'' என்ற புதிய ஆயுதக் குழுவைக் கட்டியெழுப்பி உள்ளோம். விரைவிலேயே நடவடிக்கைகளில் இறங்குவோம். தமிழர்களின் தனித்தாயகமான தமிழீழத்தை அடையும் வரையும் எங்கள் போராட்டம் ஓயாது. எமது இயக்கத்தில் இப்போது 300பேர் வரையிலான போராளிகள் இருக்கின்றார்கள். வன்னித்தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பவர்களில் இருந்து 5,000 தொண்டர்கள் வரையில் விரைவில் எம்மோடு இணைந்து கொள்வார்கள். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இருந்து எங்களின் இயக்கம் முற்றிலும் மாறுபட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மக்கள் விடுதலைப்படையின் அரசியல் நோக்கத்தை ஏற்று விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டு இணைந்து கொள்ளலாம்'' என்று இந்தப் பேட்டியில் கூறியுள்ளார் கோணேஸ்.
யார் இந்த கோணேஸ்?
""கோணேஸ் யார் என்பது ஈழத்தமிழர்களுக்கே குழப்பமாக இருக்கிறது. தனக்கு 40 வயதாவதாகவும், தான் 1980 களில் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும், பாலஸ்தீன இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தனக்குத் தொடர்பு உண்டு என்றும் அந்தப் பேட்டியில் கோணேஸ் குறிப்பிட்டுள்ளார். முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கோணேஸ் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் இவரா என்றும் தெரியவில்லை. ஆனால் ,திடீரென தோன்றியிருக்கும் இந்த ""மக்கள் விடுதலைப்படை'' பற்றியும் அதன் பின்னணி தொடர்பாகவும் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக, தமிழர்கள் விடுதலைப்போராட்டத்தை குழப்புவதற்காக சிங்கள அரசு உருவாக்கியுள்ள இயக்கமாக இது இருக்கலாம் என்ற சந்தேகமே அங்குள்ள பலருக்கும் இருக்கிறது'' என்கிறார் இலங்கையில் இருந்து வெளியேறிய ஒரு தமிழ் பத்திரிக்கையாளர்.
""ஏற்கனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இது போன்ற குழப்பங்களை உண்டாக்கினர். பிரபாகரன் மரணத்துக்குப் பிறகு செல்வராசா பத்மநாபன் இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை எடுத்து, சிதறியிருந்த போராளிகளை ஒருங்கிணைக்க முற்பட்டது சிங்கள அரசுக்கு பெரும் அபாயமாகத் தெரிந்தது. அதற்காக நயவஞ்சகமாக ஒரு திட்டத்தைப் போட்டது. அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கேபி தலைமையை ஏற்காது முரண்பட்டதைப் பயன்படுத்தி, கேபி தலைமையை ஏற்பதாக அறிவித்து அவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார் விடுதலைப்புலிகளின் ராம். இந்த ராம் சிங்கள ராணுவத்திற்கு விலைபோய்விட்டார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் கேபி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கேபியை நாடு கடத்தியது சிங்கள அரசு. அடுத்து மாவீரர் நாளான நம்பர் 27 ம்தேதி ராம் மூலமாக ""நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தலைவர் உருத்திரக்குமாரனைக் கடத்துவதற்கும் திட்டமிட்டனர். அதேவேளை, ராம் மூலமாக ""மாவீரர் நாள் அறிக்கை''யை வெளியிட்டு வெளிநாட்டுத் தமிழர் மத்தியில் குழப்பத்தையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தவும் திட்டம் தீட்டி இருந்தனர். அந்தச் சதியைக் கண்டுபிடித்த புலிகள் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் அறிவழகன் அதை அம்பலப்படுத்தினார்'' என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு பத்திரிக்கையாளர்.
இந்தத் துரோகப் பின்னணியில் தமிழர்களுக்காக இன்னொரு இயக்கம் துவக்கப்பட்டிருப்பதை தமிழர்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள்.
"" சிங்கள ராணுவம் பிடித்து வைத்துள்ள 11,000 முன்னாள் போராளிகளை விடுதலைச் செய்யக் கோரி பல இடங்களில் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் வருகிறது. மக்கள் விடுதலைப் படையைக் காரணம் காட்டி, ""தமிழ் பயங்கரவாதம்'' இன்னும் அழிந்துவிடவில்லை என்று சொல்லி, அந்தப் போராளிகள் விடுதலையைத் தள்ளிப் போடுவார்கள். மேலும், இவர்களில் தீவிரமான பல போராளிகளைக் கொன்றுவிட்டு அவர்கள் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்து காட்டுக்குள் மறைந்துவிட்டார்கள் என்று உலகிற்குச் சொல்லிவிடவும் இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாகவும் உயர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன. யார் உண்மையான போராளிகள் எனத் தெரியாமல் தமிழ் மக்களை குழப்பத்தில் வைத்திருக்கும் இந்தப் படையை சிங்கள அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் இன்னொரு பத்திரிக்கையாளர்.
இந்த சிக்கல்களில் தெளிவாக இருக்கும் ஒரே சங்கதி, தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது.

தமாஷ் புத்தாண்டு வாழ்த்து அறிக்கைகள்-09

இதோ அடுத்த புத்தாண்டு அருகே வந்து விட்டது. அரசியல் கட்சிகளின் தலைமைக் கழகங்கள் தாங்கள் தொண்டர்களுக்கு புத்தாண்டு செய்திகளை அறிக்கையாக கொடுத்தால் ( கற்பனையாக ) எப்படி இருக்கும் ? இதோ இப்படித்தான்.....

திமுக அறிவாலயத்திலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி :
""கழக உடன்பிறப்புக்களே ! தலைவர் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று சொன்னதால் அடுத்த புத்தாண்டில் சோர்ந்து விட வேண்டாம் ! அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது... அவருடைய வாரிசுகளுக்கும் ஓய்வு என்பதே கிடையாது ! தலைவருக்கு அடுத்த வருடம் 36 பாராட்டு விழாக்களுக்கு ஜெக்தரட்சகன் ஏற்பாடு செய்துள்ளார்... அதனால், புத்தாண்டு புத்துணர்ச்சி தரும் இனிய ஆண்டாக இருக்கப் போகிறது. உடன்பிறப்பே, சோர்வு நீக்கி புறப்படு தேர்தல் களம் நோக்கி !''
அதிமுக தலைமைக் கழகச் செய்தி :
"" நம் தலைவி, வருகின்ற புது வருடத்தில் சித்திரை முதல் தை மாதம் வரை நேரம் சரியில்லை என்பதால் கோடநாட்டில் ஓய்வெடுக்க உள்ளார்...அங்கிருந்து போராட்டங்களை வழி நடத்துவார்... அடுத்த ஆண்டில் நம் கட்சியிலிருந்து 110 தலைவர்கள் அணி மாறினாலும் மாறுவார்கள் என்று தளவதி வெங்கடேஷ் அறிவித்துள்ளார். அதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டியது தொண்டர்களின் கடமை ! யார் இருந்தாலும் போனாலும் கம்யூனிஸ்ட்டுகள் நமக்குத் தோள் கொடுப்பார்கள் என்பதால் கவலை வேண்டாம்!
புரட்சித் தலைவியின் தலைமையில் வருகிற புத்தாண்டில் கட்சி என்ன ஆகப் போகிறதோ என்கிற கவலையை விட்டு விடுங்கள் ! அந்தக் கவலையைத் தலைவர்கள் படுவார்கள் ! வாழ்க புரட்சித் தலைவி !''
பாமக தைலாபுரத்தில் இருந்து வெளியான வாழ்த்து அறிக்கை !
""வருகிற புத்தாண்டிலும் தலைவர் கலைஞர் அவர்கள் நல்லாட்சி நடத்துவார் ! நிச்சயம் நம்மை அழைத்துப் பேசுவார். அவர் நம்மை அழைத்துப் பேசி, தட்டிக் கொடுத்து நம் கண்ணீரைத் துடைத்து வைக்கும் நாளே நமக்குப் புத்தாண்டுத் திருநாள் ! பங்காரு அடிகளாரை யாரும் நம்ப வேண்டாம் ! சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவன் எல்லாம் இப்போது பிஎம்டபிள்யூவில் போகிறான்... அடுத்த வருடம் ஏதாவது பெரிய மாற்றம் நடந்து அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால்தான் இந்த நாட்டுக்கு விடிவு காலம் ! ஜெயலலிதாவை நம்பினால் நாசமாய்ப் போவீர்கள் ! அன்னை சோனியா கருணையின் வடிவம் ! அடுத்தக்கட்டப் போர் ஈழத்தில் புத்தாண்டில் தொடங்கும் ! கலைஞரின் நல்லாட்சியில் புத்தாண்டில் தமிழகம் பீடு நடைபோடும் ! பாமக வை அழிக்க நினைக்கிறவன் எவனாக இருந்தாலும் வருகிற புத்தாண்டில் ரத்தம் கக்கி செத்துப் போவான் ! ''
சத்யமூர்த்தி பவனிலிருந்து காங்கிரஸ் சார்பாக வந்த 13 அறிக்கைகளில் ஒன்று :
""காங்கிரஸ் தொண்டர்களே ! புத்தாண்டு வாழ்த்துக்கள் !! ஈழத்தில் விடுதலைப் புலிகளை தலைவர் ராஜபக்ஷேவும் தளபதி பொன்சேகாவும் இணைந்து ஒடுக்கிய சென்ற ஆண்டு உண்மையிலேயே நமக்கு மறக்க முடியாத ஆண்டு ! மிச்சமிருப்பவர்களையும் இந்த ஆண்டில் அழித்து விட வேண்டும் என்று அன்னை சோனியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் ! தங்கபாலுவை தலைவர் பதவியிலிருந்து எப்பாடுபட்டாவது நீக்குவோம் என்று புத்தாண்டு சபதம் ஏற்போம் ! நமக்கு ஆட்சியில் பங்கு தராத திமுகவை ஆட்சியை விட்டு நீக்கி தலைவர் கலைஞரை வாழ்த்துவோம் ! சொதப்பலாக எதிர்க்கட்சிப் பணி ஆற்றி நம்மை வாழ வைக்கும் பாரதீய ஜனதாவுக்கு புத்தாண்டு நன்னாளில் நன்றி சொல்வோம் !''

ஐந்தில் மகிழாதது...

தமிழ்நாட்டில் செயல்வழிக் கல்வி தொடங்கப்பட்டபோது சில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டாலும்,​​ "தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தை மாற்றி அமையுங்கள்,​​ வீட்டுப்பாடங்களை ஒழியுங்கள்' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்திய சென் இப்போது கூறியுள்ள கருத்தைப் பார்க்கும்போது,​​ செயல்வழிக் கல்வி நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை.​ அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை ​(இந்தியா)​ என்ற அமைப்பு,​​ ​ மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது,​​ அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு,​​ மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல,​​ சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக,​​ பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன.​ வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு ​(டியூஷன்)​ அனுப்புகின்றனர்.​ இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.

இந்த ஆய்வுகளின்படி,​​ தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை.​ முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும்,​​ பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை.​ இதற்கு ​ தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது.​ குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை.​ உரையாடல்,​​ விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன.​ குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர்.​ 5 வயதுக்குப் பிறகு,​​ தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல்,​​ ​ ​ மொழி ஆகியவற்றின் அடிப்படை,​​ படித்தல்,​​ எழுதுதல்,​​ ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது.​ பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர்.​ ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.

நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில்,​​ இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள்.​ வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள்.​ பேசினார்கள்,​​ சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள்.​ பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள்.​ அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும்,​​ தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது.​ மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.

இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள்,​​ கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது.​ நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள்.​ எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள்.​ வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள்.​ புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள்.​ தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள்.​ இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட,​​ குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!

ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.

தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.​ அந்த பாடத்திட்டங்கள்,​​ அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில்,​​ எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.​ ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால்,​​ அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு,​​ உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும்,​​ இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை.

"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல,​​ அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக,​​ நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது.​ ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.​ ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.

சனி

நகைச்சுவை..!


நெட்டில் சுட்டது..!

சமாளிப்பா?​ திறமையின்மையா?

கடந்த 13 நாள்களாக ஆந்திர மாநிலம் முழுவதுமே கொதித்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலைமை மாறி,​​ தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேர பந்த் என்பதாக வரம்புக்குள் வந்துள்ளது வன்முறை.




வன்முறை வரம்பு கடந்ததற்கும்,​​ வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான்.​ தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.​ இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.



மத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன்,​​ அவஸ்தைப் படுவானேன்,​​ இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி,​​ விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்!



தெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்.​ ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார்.​ அப்படியானால்,​​ அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் ​ கொடுத்தார்கள்?​ அதுவும்,​​ காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,​​ எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன?​ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின?



தெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு,​​ தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து,​​ பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர,​​ சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.



அதிக முக்கியத்துவம் இல்லாமல்,​​ கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை,​​ காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து,​​ வெற்றி பெறவும் வைத்து,​​ அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க ​ விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி.​ தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து,​​ அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே.​ அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.



இந்தியத் தேர்தல் முறையில்,​​ நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு,​​ தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி,​​ அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும்,​​ மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.​ அதேபோன்றுதான்,​​ தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும்,​​ கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி,​​ தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும்,​​ தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது.​ ஆனால்,​​ காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி,​​ தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது.​ ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா ​ தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி,​​ மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி,​​ இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி,​​ தலைக்குனிவை ஏற்படுத்தியது.



இழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும்,​​ இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும்,​​ புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா,​​ அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா?​ தெலங்கானாவைப் பிரித்தால்,​​ ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும்,​​ பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல்,​​ அறிவிப்புச் ​ செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால்,​​ அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா?​ அல்லது எல்லாம் தெரிந்திருந்தும்,​​ நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா!​ எப்படிப் புரிந்துகொள்வது?



இதனால் ஆந்திர மாநிலம்,​​ குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது,​​ வேதனையாக இருக்கிறது.​ மருந்து உற்பத்தி,​​ தகவல்தொழில்நுட்பம்,​​ சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ.​ 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.​ மேலும்,​​ இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு,​​ சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது.​ வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.​ ​



இப்போதும்கூட,​​ ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால்,​​ புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.



இதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல.​ ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான்.​ உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.